1917ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் நாளன்று சென்னை ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க, வீரஞ்செறிந்த எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக்கூடியதொரு சொற்பொழிவாகும் என்பது பலராலும் புகழ்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. அந்தக் கூட்டம் மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சீரிய தலைமையின்கீழ் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வெள்ளுடைவேந்தர் சர்.பி.தியாகராயர். அவர்களும் கலந்து கொண்டு, கூட்டத்திற்குத் தனிப் பெருமையையும் தனிச் சிறப்பையும் அளித்துள்ளார்கள்.