எம். வி. வெங்கட்ராம் (1920 - 2000) மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வி. தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் 1920 மே 18இல் பிறந்தார். தந்தை வெங்கடாசலம், தாயார் சரஸ்வதி. பி.ஏ. (பொருளாதாரம்) மற்றும் ஹிந்தியில் விஷாரத் படித்தார். ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் சிறுகதை, அவரது 16ஆம் வயதில் மணிக்கொடியில் வெளியாயிற்று. அப்போது அவர் கல்லூரியில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் முதலியன எழுதினார். பிரபல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவை வெளிவந்தன. 1948இல் தேனீ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் அதற்குப் பங்களித்தனர். பாலம் என்ற தமிழ் இலக்கிய இதழுக்கும் எம்.வி.வி. கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். ‘காதுகள்’ என்ற அவரது நாவல் அதில் தொடராக வெளியாயிற்று. சொந்தப் படைப்புகள் தவிர ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி, நேருஜி, பகத் சிங், இந்திரா காந்தி போன்ற இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் எழுதியிருக்கிறார். அவரது மொத்தப் படைப்புகள் இருநூறுக்கு மேல் இருக்கும். 1993இல் சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். 14.1.2000 அன்று கும்பகோணத்தில் காலமானார்.