அடுக்கடுக்காய் தோல்விகள் வந்தாலும்
தோல்விகளை வகை பிரிக்க தெரிந்திருந்தால்
வெற்றி எளிதாகும்!
வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோருமே
தோல்வியை ருசித்தவர்கள்தான்!
நம்முடையதைக் காட்டிலும் மிக இருண்ட
காலகட்டத்தில் வசித்தவன் பாரதி.
எடுத்த காரியங்கள் அனைத்திலுமே
தோல்வியைச் சந்தித்தவன் அவன்.
ஆனால்,
விடுதலை பெறுவதற்கு முன்னரே,
“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்றானே!
நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள்தான்,
தமிழையும் தமிழரையும் தலைநிமிரச் செய்யும்.
ஏட்டுப் படிப்பைக் காட்டிலும்
அனுபவங்கள் நமக்குக் கற்றுத்தரும்
பாடங்கள்தான் முக்கியமானவை.
அனுபவங்கள் எல்லோருக்கும்
ஒரே மாதிரி அமைவதில்லை.
நான் வாழ்க்கையை அதன் போக்கில்
அனுபவித்து வாழ வேண்டும் என்பவன்.
முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே.
நினைக்கிற வாழ்க்கையை அடைய முடியும்.
தூரம் அதிகம் என்றாலும்
நேர் பாதைப் பயணம் தருகிற சுகமே தனிதான்.
எனது கவிதைகள்,
எனக்கு நானே ஊட்டிக்கொண்ட
நம்பிக்கைகளின் வெளிப்பாடு.
இவற்றில்,
விரக்தியின் நிழல் சற்றும் படிந்திருக்காது.
இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை
எனது திருமணத்தின் போது (1989)
நூலாக வெளியிடப்பட்டவை.
அனுபவக்கடலில் மூழ்கிச் சேகரித்த
முத்துக்கள் இவை.
இவற்றில் ஒளி மிகுந்ததும் இருக்கும்.
ஒளி குறைந்ததும் இருக்கும்.
ஆனால், முத்துக்களைச் சேகரித்த
அனுபவங்கள் குன்றா ஒளி மிகுந்தவை.
ஆதனூர் சோழனின் நிஜப்பெயர் சோழராஜன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள ஆதனூரில் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற கனவில் வளர்ந்தவர்.
அலங்காநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, மதுரை தத்தனேரி வைத்தியநாதய்யர் நினைவு நடுநிலைப்பள்ளி, காந்திகிராமம் தம்பித்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து, மதுரை வக்ஃப் போர்டு கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரப் பட்டம்பெற்றார்.
தினமலர், தினமணி, முரசொலி, தீக்கதிர், மாலைமுரசு, ஜனசக்தி, மக்கள் தொலைக்காட்சிகளில் பணியாற்றி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸில் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளராக ஏராளமான தலைப்புகளில் நூறுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதி வருகிறார்.