நிலவினைக் கையில் பிடித்து, ஆசை தீர முத்தமிடும் ஆதவன் போல, இங்கே என் தமிழ் காதலியைக் கையில் பிடித்து முத்தமிடுகிறேன். சாவித்திரி என்கின்ற மெல்லிய தென்றலுக்காக…
மகிழ்ச்சியும் துள்ளலும் எனக்குள் பிறப்புதானே மரபு… அது இங்கே... குள்ள முனிவன் அகத்தியனின் குறுந்தொடையில் இலக்கியமாய் கனிந்த தமிழ், கண்ண முகத்தழகன் அய்யன் சிவாஜியின் குரலில் கரு பெற்றதே... அந்தக் கரு தாங்கி என் பயணம் இங்கே...
சாவித்திரி... இந்த பூங்காற்றைப் புழுதியாக்கிட, சூழ்ச்சிகள் சூழ்நிலையாய் மாறி நின்ற கதையை, பிரபல தயாரிப்பாளர், மறைந்த ஏ.எல்.சிறீனிவாசனின் மருமகள் திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, என் பேனா என்னையும் அறியாது துடிக்க ஆரம்பித்தது! வேடனின் அம்பு துளைத்து துடிக்கும் குருவியைப் போல...
ஆராயத் தொடங்கினேன்… சாவித்திரி என்ற அந்த அழகுப் பைங்கிளியின் விரிந்த சிறகுகள் எங்கே முறிக்கப்பட்டது என்று. நிலாவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் போல அல்ல என் தேடல்! பல நூறு மைல்கள் கடந்து போய், உணர்வுகளைத் தேடும் காட்டுப் பறவையைப் போல.
அணிகலன்களை அள்ளலாம் என்று பறந்த எனக்குக் கிட்டியவை எல்லாம் அழுகையின் படிவங்களே. பொய்யான திரை அழகில் மெய்யான வாழ்வைத் தொலைத்த சாவித்திரியின் சறுக்கல், விதி தீட்டிய வித்தியாச விருந்தோம்பல். நான் பதியவிடும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையின் உணர்ச்சிக் களம்.